
`ஐபோன் இல்லை, பிளே-ஸ்டேஷன் இல்லை - தந்தை மகனுக்குக் கொடுத்தது அதை விட பெரிய பொக்கிஷம்! Viral video
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஒரு கிளிக்கிலேயே உலகமே நம் கைகளுக்குள் வந்துவிடுகிறது. ஆனால், 90-களில் வளர்ந்த குழந்தைகளுக்கு அந்த ஒரு ரூபாய் காமிக்ஸ் புத்தகமும், அதில் வரும் சித்திரங்களும்தான் உலகமாக இருந்தன. அத்தகைய ஒரு பொற்காலத்தை மீண்டும் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த ஒரு தந்தை.தனது சிறுவயது முதல் உயிராக நேசித்துச் சேகரித்து வைத்திருந்த 30 ஆண்டுகள் பழமையான காமிக்ஸ் புத்தகங்களை, தனது மகனுக்கு அவர் அறிமுகப்படுத்திய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி, பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது.சாதாரணமாக ஒரு பழைய இரும்புப் பெட்டியைத் திறப்பதில் தொடங்கும் அந்த வீடியோ, பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களைக் கண்டதும் நெகிழ்ச்சியில் உறைய வைக்கிறது. அதில் 90-களின் சூப்பர் ஹீரோக்களான நாகராஜ் (Nagraj), சூப்பர் கமாண்டோ துருவ் (Super Commando Dhruva), டோகா (Doga) மற்றும் குழந்தைகளின் எக்காலத்து விருப்பமான டிங்கிள் (Tinkle) மற்றும் சச்சா சவுத்ரி (Chacha Chaudhary) போன்ற நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தாள்கள் கூட நைந்து போகாமல் மிகக் கவனமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன.அந்தத் தந்தை தனது மகனிடம் ஒவ்வொரு புத்தகத்தையும் காட்டும் விதம், அவர் தனது சொத்தை விட மேலான தனது "குழந்தைப் பருவத்தையே" மகனுக்குப் பரிசளிப்பது போல இருந்தது.இந்த நெகிழ்ச்சியான காட்சியைப் பகிர்ந்த டாக்டர் பூமிகா திவாரி, "இது வெறும் காகிதங்கள் அல்ல, 30 ஆண்டுகால காதல் மற்றும் அர்ப்பணிப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைய குழந்தைகள் கோடை விடுமுறையை டேப்லெட்களிலும் ஸ்மார்ட்போன்களிலும் கழிக்கும் நிலையில், இந்தச் சிறுவன் தனது தந்தையின் பால்ய காலக் கதைகளுடன் நேரத்தைச் செலவிடுவது ஒரு அழகான தலைமுறை மாற்றத்தைக் காட்டுகிறது. View this post on Instagram A post shared by Dr. Bhumika Tiwari (@bhumi.tiwari603) ஒரு தந்தை தனது பழைய நினைவுகளைத் தூசு தட்டி எடுத்து, அதைத் தனது வாரிசுக்குக் கடத்துவது என்பது அந்தப் புத்தகங்களுக்கு அவர் கொடுக்கும் மிகப்பெரிய மரியாதை.இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வெளியானவுடன் 90-ஸ் கிட்ஸ் பலரும் தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். "இன்றைய ஐபோன்களும் பிளேஸ்டேஷன்களும் அந்த ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் வாசனைக்கு ஈடாகாது" என்றும், "அந்தத் தந்தைதான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்" என்றும் கருத்துகள் குவிந்து வருகின்றன. ஒரு சிறிய இரும்புப் பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த அந்தப் பழைய புத்தகங்கள், இன்று தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஒரு புதிய உணர்வுப் பாலத்தை அமைத்துள்ளன. நீங்கள் இது போல், உங்கள் குழந்தைகளுக்காக சேமித்த ஒரு பொருள் என்ன என்று கமென்ட்டில் சொல்லுங்க வாசகர்களே..!
இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் Trending செய்திகளை உள்ளடக்கியது.