
தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் : போராடி ஏலத்தில் விற்பனை செய்து முடித்த மத்திய அரசு!
மும்பையில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய தாவூத் இப்ராகிம் இப்போது தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனுக்கும், அவனது குடும்பத்திற்கும் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் நிலம், வீடு போன்ற சொத்துக்கள் இருந்தது. அந்த சொத்துக்கள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிம் குடும்ப சொத்துக்கள் இதற்கு முன்பு நடந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இது தவிர தாவூத் இப்ராகிம் குடும்பத்தினர் வசித்து வந்த அவர்களது வீடும் ஏலத்தில் விடப்பட்டது. ஆனால் தாவூத் இப்ராகிமின் சொந்த ஊரான மும்பாகே என்ற இடத்தில் இருந்த 4 விவசாய நிலம் விற்பனையாகாமல் இருந்தது. இந்த நிலத்தை மத்திய அரசு இதற்கு முன்பு 2017, 2020, 2024, 2025ம் ஆண்டுகளில் ஏலம் விட்டது. கடைசியாக கடந்த நவம்பர் மாதம் இந்த சொத்துக்களின் மதிப்பை 30 சதவீதம் அளவுக்கு குறைத்து ஏலம் விட்டனர். அப்படி இருந்தும் அந்த சொத்துக்கள் ஏலம் போகவில்லை. இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராகிமின் தாயார் அமீனா பெயரில் இருக்கிறது. இந்த சொத்துக்களை மத்திய அரசு மீண்டும் ஏலம் விட்டது. இதில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் உட்பட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் 4 நிலத்தையும் மும்பை தொழிலதிபர் ஏலத்தில் எடுத்தார். இதில் ஒரு சொத்து மட்டும் ஆரம்ப விலை ரூ.9.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை எடுக்க மும்பை தொழிலதிபர் உட்பட இரண்டு பேர் வந்திருந்தனர். இதில் மும்பை தொழிலதிபர் ரூ.10 லட்சத்திற்கு அந்த சொத்தை ஏலத்தில் எடுத்தார். இது தவிர மற்ற 3 சொத்துக்கும் மும்பை தொழிலதிபர் மட்டும் ஏலம் கேட்டு இருந்தார். வேறு யாரும் இதில் பங்கேற்கவில்லை. இதையடுத்து 3 சொத்துக்களையும் மும்பை தொழிலதிபருக்கே விற்பனை செய்யப்பட்டது. இதற்கு ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணத்தையும் மும்பை தொழிலதிபர் கட்டி முடித்த பிறகு அந்த சொத்து அவருக்கு சொந்தமாகும். இதன் மூலம் தாவூத் இப்ராகிற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் கீழ், மத்திய அரசு இந்தச் சொத்துக்களை பறிமுதல் செய்து இருந்தது.!
இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் Trending செய்திகளை உள்ளடக்கியது.