தமிழ் டைம்ஸ் logo
திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!
19 மார்ச், 2026
vikatan
Crime

திருட்டு பைக்; கைகொடுத்த தரவுகள்.. மாணவி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி?- எஸ்.பி விளக்கம்!

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 5 பேரின் டி.என்.ஏ மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், ஒருவரின் டி.என்.ஏ மாதிரி மற்றும் மாணவியின் நகத்தில் இருந்த சிறிய சதைத் துணுக்கு மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவர் கொலையாளி எனக் கண்டறியப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட எஸ்.பி., மதன், "தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு, போக்சோ வழக்கு என்பதால், சில தகவல்களை மட்டுமே தர முடியும். குற்றப் பின்னணி கொண்டவர்களின் தகவல்களை முழுமையாக ஆய்வு செய்தோம். டிஜிட்டல் ஆவணங்கள், சுமார் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்திய நேரடி விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் 4 டி.எஸ்.பி-க்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 150 காவலர்கள் விசாரணை மற்றும் குற்றவாளிகளைத் தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.புலனாய்வுப் பிரிவு, மோப்பநாய் பிரிவு என வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை என்ற போதிலும் அந்தப் பகுதியைச் சுற்றி பல பகுதிகளில் உள்ள 98 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் சேகரிக்கப்பட்ட தகவல் அடிப்படையில் 2,514 தொலைபேசி தகவலும் சேகரிக்கப்பட்டன.வேறு குற்றப் பின்னணி உள்ள நபர்கள் குறித்து பார்த்து கண்காணித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள பல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். நேரடியாக மற்றும் டிஜிட்டல் முறையில் தகவல் சேகரிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணைகளும் அறிவியல் பூர்வமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சம்பவத்தில் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் படத்தையும் பெயரையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுவரை அதை பயன்படுத்திய ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் 10 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் பெண் போலீஸார் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.விசாரணையின்போது, சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு சந்தேகத்திற்குரிய இருசக்கர வாகனம் நின்றதும், பின்னர் அது மாயமானதும் தெரியவந்தது. அருகில் இருந்த காற்றாலை (Windmill) சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வாகனம் நடமாடியது உறுதியானது. அந்த வாகனத்தின் பதிவு எண் மாற்றப்பட்டிருந்ததும், அது ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பதிவான 'திருட்டு பைக்' என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானவர்களின் பட்டியலை அந்தத் திருட்டு பைக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது, தர்ம முனீஸ்வரன் என்பவர் மீது சந்தேகம் வலுத்தது. இவர் ஏற்கெனவே ஒரு கடுமையான குற்றவழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2025 டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக இருந்த தர்ம முனீஸ்வரனை இன்று தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், மாணவியைத் தனிமையில் வழிமறித்துக் கடத்தி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றபோது மாணவி எதிர்த்ததால், அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். எவ்வித அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் இந்த வழக்கு விசாரணை முறையாக நடத்தப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம்" என்றார்.

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் Crime செய்திகளை உள்ளடக்கியது.