தமிழ் டைம்ஸ் logo
தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம்
25 மார்ச், 2026
newstamil
அரசியல்

தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம்

234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள் தான், கவனம் சிதறாது இலக்கை வெல்வோம் என்று, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.நேர்காணல் நிறைவு இதுகுறித்து தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது;2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடும், விருப்ப மனு அளித்தவர்கள் உடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.ஜனநாயகப்பூர்வ பேச்சுவார்த்தை பத்தாண்டுகால படுமோசமான அ.தி.மு.க. ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டி இருக்கிறோம். இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திமுக சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை, ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன.தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன.நேரில் விளக்கம் தந்தேன் கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ, மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன். அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன்.உறுதி செய் உத்தரவாதம்எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத் தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கி இருக்கிறேன்.கூட்டணி வலிமைக்கு சான்று தேர்தல் களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றைப் பரிசீலித்து எந்தளவுக்கு வழங்க முடியுமோ அவற்றை வழங்குவதும் கூட்டணிக்கான நடைமுறை. அதனை ஜனநாயகத் தன்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி.கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன், தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும்.சதிகாரர்களின் எண்ணங்கள்... தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திமுகவுக்கு, தோளோடு தோள் நிற்பவை நம் தோழமை இயக்கங்கள். மதச்சார்பின்மை - மாநில உரிமை – சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி தான் நம்முடையது. இதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கின்றனர். திசை திருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.16,500 பேருடன் நேர்காணல்தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை திமுக குழு நடத்தி வந்த நிலையில், தி.மு.க.வின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறேன். மார்ச் 17ஆம் தேதி தொடங்கி, 23ஆம் தேதி வரை, இடையில் ரமலான் திருநாள் விடுமுறை தவிர்த்து, 6 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்று உள்ளது.நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணி நேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்த உடன்பிறப்புகளின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது.இந்த மு.க.ஸ்டாலின் தான் நிற்கிறேன்அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள் தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர்.175 இடங்களில் உதயசூரியன்உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது. நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது.கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்.இவ்வாறு மடலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. The post தோழமை தொடர்வோம், களத்தினில் வெல்வோம் appeared first on https://www.newstamil.tv.

இந்த கட்டுரை newstamil ஆல் வெளியிடப்பட்டது மற்றும் அரசியல் செய்திகளை உள்ளடக்கியது.