தமிழ் டைம்ஸ் logo
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
30 ஜூலை, 2026
abplive
இந்தியா

Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்

 Indian Billionaires: இந்தியர்களில் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 300 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் 570 இந்தியர்கள்: இந்தியாவின் மிகவும் பெரிய பணக்காரர்களின் பட்டியல் என்பது மேலும் நீளமடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் தாக்கல் செய்த தரவுகளின்படி,  2025-26 மதிப்பீட்டு ஆண்டில் ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் வருவாய் ஈட்டும் தனி நபர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது 2024-25 காலகட்டத்தில் வெறும் 415 பேர் ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறதா? என நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி மேற்குறிப்பிடப்பட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ளார்.    5 ஆண்டுகளில் 300% உயர்வு 5 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2021-22 காலகட்டத்தில் ஆண்டிற்கு குறைந்தபட்சம ரூ.100 கோடி வருவாய் ஈட்டும் தனி நபர்களின் எண்ணிக்கை 142 மட்டுமே ஆகும். அந்த எண்ணிக்கையானது தற்போது 300 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்து இந்த பட்டியலில் புதியதாக 576 பேர் இணைந்துள்ளனர்.  ஒரு குறுகிய காலகட்டத்தில் பதிவான சரிவைத் தவிர மற்றபடி இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2021-22 காலகட்டத்தில் 142 ஆக இருந்த எண்ணிக்கை, 2022-23ல் 301 ஆக அதிகரித்தது. 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் மட்டும் 284 ஆக சரிந்தது. இருப்பினும் 2024-25 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 415 ஆக ஏறுமுகத்திற்கு திரும்ப,  2025-26 மதிப்பீட்டு ஆண்டில் 576 ஆக புதியௌச்சத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் 'பில்லியனர்கள்' என குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்ட போதிலும், பில்லியனர் என்பதற்குத் தங்களிடம் அதிகாரப்பூர்வமான வரையறை இல்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதற்கு பதிலாக, ஆண்டு வருமானம் ரூ. 100 கோடி அல்லது அதற்கு மேல் இருப்பதாகத் தெரிவிக்கும் வரி செலுத்துவோரின் வருமான வரி அறிக்கை (ITR) தரவுகளை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  தரவுகள் இல்லை - அரசு பதில் 2025-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் அல்லது முந்தைய 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் அடிப்படையில் 'பில்லியனர்' என்ற சொல்லுக்கு சட்டப்பூர்வமான வரையறை எதுவும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு குறித்தும், கடந்த ஐந்து ஆண்டுகளில் அது எவ்வாறு மாறியுள்ளது என்பது குறித்தும் அரசாங்கம் தரவுகளைப் பராமரிக்கிறதா என்ற கேள்விக்கு, அத்தகைய அதிகாரப்பூர்வ தரவுகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. அதாவது"1957-ஆம் ஆண்டின் செல்வ வரிச் சட்டம் 01 ஏப்ரல் 2016 முதல் ரத்து செய்யப்பட்டது, மேலும் வரி செலுத்துவோரின் மொத்த செல்வம் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிப்பதில்லை," என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையும் படியுங்கள்: Honda QC3 Scooter Vs Rivals: ஹோண்டா QC3 மின்சார ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் எப்படி? விலை, பேட்டரி, ரேஞ்ச், வசதி - முழு ஒப்பீடு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்: மேற்குறிப்பிடப்பட்டுள்ள பெரும் பணக்காரர்கள் தொடர்பான புள்ளி விவரங்களானது, சமூகத்தில் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மையை காட்டுவதாக கவலைகள் எழுகின்றன. ஆனால், மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையிலான நுகர்வு ஏற்றத்தாழ்வு இடைவெளி குறைந்து வருவதாக அரசு விளக்கமளிக்கிறது. வரி நடவடிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களின் கலவையின் மூலம் வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வைச் சரிசெய்து வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதம மந்திரி-கிசான், ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் போன்ற முதன்மைத் திட்டங்களுடன், வேலைவாய்ப்பு, புத்தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை அடங்கும். மேலும் இந்தியாவின் வருமான வரி அமைப்பின்படி, மிக அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் சாதாரண வருமான வரிக்கு மேலாகக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.

அதிகம் படிக்கப்பட்டது