
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் தலைமை தாங்கும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலியில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் இன்று (ஜூலை 28) ஆளுநர் அர்லேகர் தலைமையில் 33ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கிய பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் புறக்கணிப்பு நம் மாநிலத்தின் தமிழ்த்தாய் வாழ்த்தை, மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய நிலையில், அவரின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் காரணமாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. மார்க்சிஸ்ட் கண்டனம் ஏற்கெனவே இதுதொடர்பான அறிவிப்பு வெளியானபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து இருந்தது. ‘’ஆளுநர் பங்கேற்கிறார் என்பதற்காகவே ஒரு மாநிலத்தின் மாநிலப் பாடலை பின் வரிசைக்கு தள்ளுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் கீழ் செயல்படும் ஒரு பல்கலைக்கழகத்தில் மாநிலப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என்பது இயல்பான எதிர்பார்ப்பு ஆகும். இந்நிலையில் ஆளுநர் அலுவலக சுற்றறிக்கை விரும்பத்தகாத சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அநீதியானது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் இயங்குகிற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாவது இடம் என்பது அவருக்கு இழைக்கப்படுகிற அவமரியாதை’’ என்று கூறி இருந்தது. அதேபோல அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தனர். எனினும் எல்லோரின் எதிர்ப்பையும் மீறி, ஆளுநரின் உத்தரவுக்கு இணங்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வந்தே மாதரம், தேசிய கீதம் ஆகியவை பாடப்பட்டதற்குப் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.