வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
இந்தியாவில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். எனவே இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் உடனடியாக அந்த வேலையை முடித்து கொள்வது சிறப்பு. நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மதிப்பீட்டு ஆண்டு 2026-27-க்கான (நிதியாண்டு 2025-26) வருமான வரிக் கணக்கை ITR 1 அல்லது ITR 2 ஆகிய படிவங்களை பயன்படுத்தி இன்றிரவு 12 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த தேதியை நீட்டிப்பதாக எந்த ஒரு பரிசீலனையும் இல்லை என அறிவித்து விட்டது. மேலும் கடைசி நேரத்தில் எத்தனை பேர் ITR இணையதளத்தை பயன்படுத்தினாலும் இணையதளம் சிரமம் இன்றி செயல்படும் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளது. சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என வருமான வரி துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் லட்சக்கணக்கான சம்பளதாரர்கள் ஒரே சமயத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முற்படலாம். எனவே இயன்றவரை காலையிலேயே வேலையை முடிப்பது சிறப்பு. வேலைக்கு செல்லும் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி தான் இன்றுடன் முடிகிறது. வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டும் நபர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத நபர்கள் ITR 3 மற்றும் ITR 4 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இவர்களுக்கு ஆகஸ்ட் 31 கடைசி நாள். அதே போல கணக்கு தணிக்கை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள வணிகம் அல்லது தொழில் செய்பவர்களுக்கு அக்டோபர் 31 கடைசி நாள். ஒரு வேளை இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறுபவர்கள், தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) முறையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இதற்கு அபராதம் விதிக்கப்படும். உங்களின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். பழைய வரி கணக்கு நடைமுறை, புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம். புதிய வரி கணக்கு நடைமுறையில் பல்வேறு வரி சலுகைகள் கிடைக்காது என்றாலும் இதில் வருமான வரி உச்சவரம்பு அதிகம், ஆனால் பழைய வரி முறையில் பல்வேறு முதலீடுகளை குறிப்பிட்டு வரி சேமிப்பு செய்யலாம். உங்களுக்கு எது பொருத்தமானதோ அதனை பயன்படுத்தி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் செய்யும் பெரிய தவறு இறுதியில் e- verification செய்யாமல் விடுவது தான். இதனை செய்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவே அர்த்தம். எனவே e- verification-ஐ மறக்காமல் செய்து விடுவது நல்லது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்து அந்த ஆவணத்தை சேமிக்க வேண்டும். ஏனெனில் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் இதனை ஒரு ஆவணமாக கேட்கப்படும்
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் இந்தியா செய்திகளை உள்ளடக்கியது.